Saturday, January 12, 2013

பெண்கள் தினமும் இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம்

"பெண்கள் தினமும் இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில், கண்கள் சோர்ந்து, உடல் நிலையைப் பாதிக்கும்' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக் கழக மருத்துவ ஆய்வாளர்கள், தூக்கத்தின் அவசியம் குறித்து ஆய்வு செய்தனர். 

பெண்கள் தினசரி இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில், அவர்களின் கண்கள் சோர்ந்து, உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இது ஆண்களுக்கு பொருந்தாது. குறைந்த நேர தூக்கம், குறைந்த வயதிலேயே இறப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. ஆண், பெண் இருபாலருக்கும் தூக்கத்தில் வேறுபாடு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.

தினசரி இரவில் ஏழு மணி நேரம் தூங்கும் பெண்களை விட, ஐந்து மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. போதிய தூக்கம் இல்லாத பெண்கள், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆண்களை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும், போதிய தூக்கமின்மைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆனால், இது போன்ற நெருங்கிய தொடர்பு ஆண்களிடம் காணப்படவில்லை. ஆழ்ந்த தூக்கத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதில் இரைச்சல் முதலிடமும், குழந்தையின் அழுகை இரண்டாமிடமும் பெறுகின்றன.