Saturday, June 8, 2013

லஞ்சம் ஏன்?



லஞ்சங்களின் முதன்மை இருப்பிடங்களாக இருப்பவை அரசாங்க அலுவலகங்கள்தான் என்றால் அது மிகையல்ல.

பொதுமக்களுக்காகவும்- அரசாங்க ஊழியர்களுக்காகவும் செயல்பட வேண்டிய அரசு அலுவலக ஊழியர்கள் தங்களின் பணிசுமையை காரணம் காட்டி வரம்பிற்கு மீறிய வகையில் பணத்தினை பொதுமக்களிடமிருந்தும், அரசு ஊழியர்களிடமிருந்தும் பறிப்பதை வெளியில் சொல்ல எந்த ஒரு குடிமகனும் முன்வருவதில்லை.

காரணம்! அந்த நேரத்தில் அவனுக்கு அந்த வேலை உடனடியாக முடியவேண்டும். அவசரம், அவசரத்தில் அலுவலகத்தில் கேட்கும் பணத்தினை கொடுத்துவிட்டு தங்கள் காரியத்தினை சாதித்து கொண்ட திருப்தியில் வெளிவருகிறான் ஒவ்வொரு அரசாங்க ஊழியனும் , பொதுமக்களும்.

ஆனால், அந்த வேலையை முடிக்க அவன் அவ்வளவு தொகையை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை பொறுமையாக நிதானமாக உட்கார்ந்து சிந்தித்தாலே போதும்.

அதெல்லாம் ஒருபுறம் இருக்க அலுவலக நடைமுறைச் சிக்கல்கள் பலவாறாக இருக்கின்றன.

அலுவலகத்தில் பல லஞ்ச வழக்குகளில் பிடிக்கப்படுபவர்கள் எல்லாம் உயர் அதிகாரிகள் அல்ல ...மாறாக சாதாரண அடிதட்டு ஊழியர்கள் தான்.

பிறகு உயர் அதிகாரிகளுக்கும் இதற்கும் சம்மந்தம் இருக்காதா என்ன? என்ற கேள்விக்கும் விடை உண்டு.

கடைநிலை ஊழியனிடமிருந்து பல share களாக உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் பங்கிடப்படுவதை யாராலும் மறுக்க முடியாது.

சில அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் நல்ல ஒழுக்க சீமான்களாக இருந்தாலும் உயர் அதிகாரிக்கு கீழ் உள்ள அலுவலர்கள் வரை அனைவருக்கும் இந்த பணம் பிரித்தளிக்கப்படுகிறது என்பதுதான் கொடுமையான விடயம்.

லஞ்சம் ஏன்?

லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் அலுவலக நடைமுறை சிக்கல்களாக பல காரணங்களை முன் வைக்கலாம்.

அவை.
1. சம்பள பற்றாக்குறை
2. உயர் அதிகாரிகளின் வற்புறுத்தல்
3. அலுவலக நடைமுறை செலவுகளை சமாளிக்க
4. printer toner வாங்க
5. Print செய்ய பேப்பர் வாங்க
6. உயர் அதிகாரிகள் வந்தால் அவர்களை கவனிக்க
7. தணிக்கை அலுவலர்களை - சிக்கல் இன்றி கவனிக்க

இப்படி பலவாறான காரணங்களை என்னதான் லஞ்சம் வாங்குபவர்கள் அடுக்கினாலும் லஞ்சம் - லஞ்சம்தான்... தவறு தவறுதான்.

ஆசிரியர்களும் லஞ்சம் அளிக்கிறார்கள்!

எனக்கு தெரிந்த வரையில் சுத்தமான.. நாணயமான... நேர்மையான ... பணி என்றால் அதில் ஆசிரியர் பணியும் ஒன்று.
அத்தகைய ஆசிரியர்களிடமிருந்தே லஞ்சத்தினை பார்க்கும் அலுவலகங்கள் இருக்கதான் செய்கின்றன.

அலுவலக ஊழியர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதை விட ... ஆசிரியர்கள் லஞ்சம் அளிக்கிறார்கள் என்பதைதான் நான் இங்கு அழுத்தம் திருத்தமாக கூற கடமைபட்டிருக்கிறேன்.

இந்தியாவின் நாளைய தூண்களை வடிவமைக்கும் ஆசிரியர்கள் இப்படி ஒரு கேவலமாக செயலில் ஈடுபடுவது சாக்கடையை மேலும் அசுத்தமாக்குவதாகதான் அமையும்.

ஆசிரிர்கள் தங்களின் தேவைகளை நிறைவு செய்துகொள்ள அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. தலைமை ஆசிரியரின் மூலமாக தபாலை கொடுத்து அனுப்பினாலே போதும்.

அல்லது Register Post இல் post செய்தாலே போதும் . அதை விடுத்து அவசர கதியில் அலுவலகத்திற்கு சென்று ஆயிரம் ஆயிரமாக அலுவலக ஊழியர்களுக்கு லஞ்சம் அளித்து ஒரு பிரட்சனையான நாளைய சமூக அநீதிக்கும் அடித்தளம் அமைப்பதை ஒரு போதும் ஏற்க கூடாது.

தமிழக அரசின் சிறப்பான திட்டம்.

முன்பெல்லாம் சாதி, வருமானம், இருப்பிடம் போன்ற சான்றிதழ்களை பெற VAO ( கிராம நிர்வாக அலுவலரின் ) அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அங்கு இருக்கும் தரகர் ஒருவர் இடையில் கொஞ்சம் பணத்தினை நம்மிடமிருந்து கரந்த பின்னரே சான்றிதழ்களை அளிக்க கையெழுத்து வாங்கி தருவார்.

பல VAO க்கள் இந்த லஞ்ச விவகாரத்தில் கையும் களவுமாக மாட்டி இருக்கிறார்கள்.

இதனை மனதில் கொண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதற்காகவும் சகாஜ் அமைப்பின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும ‘மக்கள் கணினி மையம் ‘ எனும் அமைப்பினை நிறுவி அதன் மூலமாகவே பதிவு கட்டணம் 50 மட்டும் வாங்கப்பட்டு சான்றிதழ்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலமாக பெருமளவில் லஞ்சம் தாண்டவமாடும் இடத்திலேயே ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதை உணரலாம்.

ஒரு பணிவான வேண்டுகோள்:
இதேபோல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் தங்களுக்கான பல்வேறு சேவைகளை ஆன்லைனிலேயே பதிவு செய்யும் ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்வதன் மூலமாக அலுவலக லஞ்சத்தினை முற்றிலும் ஒழித்து நல்லதொரு சமூகத்தினை நிச்சயம் நிலைநாட்ட முடியும்.


பொதுமக்கள் , அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
லஞ்சத்தின் மூலமாகதான் ஒரு காரியம் சாதிக்கப்பட வேண்டும் என்ற சிக்கல் வந்தால் லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் தகவல் அளித்துவிடுங்கள் மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

Telephone : 91-44-24615929 / 24615949 / 24615989 / 24954142


லஞ்சத்தினை ஒழிப்போம்... நிம்மதியாய் வாழ்வோம்...