Sunday, April 28, 2013

டெல்லியில் கழிவறையில் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட 6 வயது சிறுமி!


தெற்கு டெல்லியின் பதர்பூரில் உள்ள பொதுக்கழிவறை ஒன்றினுள் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை முயற்சிக்கு உள்ளான இச்சிறுமியை நேற்று மாலை மீட்டெடுத்த காவல்துறையினர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடனடியாக அச்சிறுமிக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொண்ட பின்னர் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சிறுமியின் உடல் முழுவதும் உள் மற்றும் வெளிக்காயங்கள் உள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமி அந்த கழிவறையின் அருகே உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வந்ததாக விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் டிசம்பர் மாதம் பேருந்தில் பாலியல் வல்லுறவு சம்பவம் நடைபெற்ற பின்னர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அப்படியிருந்தும், தொடர்ந்து அண்மையாகலங்களில் இளவயது சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டதும் உடனடியாக டெல்லி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததே இச்சம்பவங்கள் அதிகரிப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.