Friday, August 9, 2013

தலைவா திரை விமர்சனம்



மும்பை தாராவியில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்பவராக சத்யராஜ். அதனால் பிரபல தாதாவால் கட்டம் கட்டப்பட்டு சுட்டுக்கொல்ல முயல்கையில் அவரின் மனைவி ரேகா துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு இறந்து போகிறார்( சரண்யா கேரக்டராம்). சினம் கொண்ட சத்தியராஜ் அந்த தாதாவை போட்டுத் தள்ளிவிட்டு தான் தாதாவாக மாறுகிறார்.தம் மகனான ஐந்து வயது விஸ்வா(விஜய்)வுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அவரை நாசரிடம் கொடுத்து,தான் யார் என்பதே தெரியக்கூடாது என்று சொல்லி ஆஸ்ட்ரேலியா அனுப்பி விடுகிறார்.
‘அண்ணா’வான சத்யராஜ் தாராவி மக்களுக்கு தலைவனாக தொண்டு செய்கிறார். தலை மறைவு வாழ்க்கையும் நடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவில் விஜய் தண்ணி பிசினெஸ்(குடிக்கிற தண்ணிதான்) செய்கிறார். ‘தமிழ் நாட்டுக்கு தண்ணி கொண்டுவர முடியவில்லை…ஆனால் நீ ஆஸ்திரேலியாவுக்கு தண்ணி கொண்டு வந்துட்டியே’ என்கிற பன்ச் டயலாக் வேற இருக்கிறது. அங்கு அமலாபாலையும் அவர் தந்தை சுரேசையும் சந்திக்கிறார். விஜயுக்கும் அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து திருமணம் வரை செல்கிறது. திருமணத்திற்கு விஜயின் அப்பாவை சந்தித்தே ஆகவேண்டும் என சுரேஷ் பிடிவாதம் பிடிக்க,சொல்லாமல் கொள்ளாமல் எல்லோரும் மும்பை வருகின்றனர். அங்கே கல்யாண விசயமாக பேசவரும் சத்யராஜை நோக்கி அமலாபாலும் சுரேஷும் துப்பாக்கியை நீட்டுகிறார்கள். ஏன்னா இருவரும் சிபிஐயாம்.

கைது செய்து கொண்டு செல்லும் வழியில் குண்டுவைத்து கொல்லப்படுகிறார் சத்யாஜ். அவரைக் கொன்றது யார் எனக் கேக்க தோணுமே…முன்பு சத்யராஜ் ஒரு தாதாவை போட்டுத்தள்ளினார் அல்லவா…அவரோட மகன்தான்.அப்புறமென்ன அப்பா விட்டுவிட்டுப் போன அந்த அற்புத பணியை மகன் விஜய் தொடர்ந்து செய்ய, கடைசியில் அப்பாவைக் கொன்ன அந்த வில்லனை கொல்கிறார்.

அம்புட்டுதேன் கதை. ரஜினியை பாட்சா பாய்..பாட்சா பாய் என்று அழைத்தது போல இதில் விஜயை விஸ்வா பாய் என்கிறார்கள். எங்கிருந்து பாய் வந்தது என்பதுதான் தெரியவில்லை.தலைவா என்று டைட்டில் இருப்பதால் ஏதோ விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக இந்தப்படம் இருக்கும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஏன்னா இதில் தமிழ்நாட்டை துளி அளவு கூட காண்பிக்கவில்லை.முற்பகுதி ஆஸ்ட்ரேலியா ..பிற்பகுதி முழுவதும் மும்பை.

முதல் பாதி செம ஜவ்வு… சந்தானம் காமெடியும் செம போர். இப்படியே போனால் விவேக் மாதிரி ஓரங்கட்டப் படுவார். இண்டர்வலுக்கு முன்பு படம் லேசாக சூடுபிடித்தது போல் இருந்தாலும் பிறகு தலை குப்புற படுத்து விடுகிறது. அது என்னப்பா சீரியசான காட்சிகளில் எல்லாம் எல்லோரும் முகத்தைப் பார்த்து பேசாமல் மோட்டு வளையை பாத்து பேசுறாங்க.. ஒருவேளை ஓலகத்தரத்தில் முயற்சி பண்ணி இருக்காங்களோ..

விஜயின் அட்டர்பிளாப் படங்களில் கூட அவரின் அறிமுக காட்சி அற்புதமாக இருக்கும். படத்தின் முதல் சொதப்பலே இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. அறிமுகப் பாடலும் வெறுப்பேற்றுகிறது.துப்பாக்கி என்கிற முழு நீள ஆக்சன் படத்திற்கு அடுத்தாக வரும் இதில் இடைவேளை வரை ஒரு பைட் சீன் கூட இல்லை. ஜோடி நம்பர் ஒன்னில் ஆடிய சில்லரைப் பசங்களை வைத்துக்கொண்டு ‘தமிழ் பசங்க’ என்கிற டான்ஸ் குருப்பை நடத்துகிறார் விஜய். அடடே.. அப்போ டான்ஸில் பின்னி எடுத்திருப்பார் என கேக்க தோணுமே… அந்தக் கொடுமையை தியேட்டரில் பாருங்க..சுறா தோத்துடும். அதிலும் புன்னகை மன்னன் கமல் ரேவதி மாதிரி விஜய் அமலாபால் ஒரு BGM க்கு ஆடுவாங்க பாருங்க… கண்கொள்ளா காட்சி.

அமலாபாலிடம் முகத்தைத் தவிர காட்டுவதற்கு வேறொன்றும் இல்லையென நினைத்திருப்பார் போல இயக்குனர். நல்லவேளை இருக்கிற வெறுப்பில் அப்படி எந்த விபரீத முயற்சியும் இயக்குனர் எடுக்காதது பாராட்டுக்குரியது.

 படத்தில் மற்றொரு மைனஸ் இசை.ஒரு பாட்டு கூட ரசிக்கும்படி இல்லை.மும்பையில் நடக்கும் கலவரத்தின் போது இந்தியன் படத்தில் வரும் பின்னணி இசை ஒலிக்கிறது.இதில் விஜய் பாடும் ஒரு பாடலில் G.V.பிரகாஷ் அவருடன் ஒரு சீன் ஆடுகிறார்(இது வேறயா..)

படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று தனியாக எதுவும் கிடையாது.ஏன்னா லாஜிக்கே இல்லாத படத்தில் எங்கே போயி லாஜிக் மிஸ்டேக்கை தேடுறது. படத்தில் வில்லன்கள் சம்மந்தப்பட்ட ஒரு முக்கியமான வீடியோ டேப் யார் கையிலும் கிடைக்காமல் ஒருவனால் பிக்பாக்கெட் அடிக்கப்படுகிறது.அது பிக்பாக்கெட்டுதான் அடிக்கப் பட்டிருக்கும் என்பதை வில்லனும் விஜயும் ஒரு சேர கணிப்பது எட்டாவது அதிசயம்.அந்த பிக்பாக்கெட் காரனைத் தேடி விஜயும் வில்லனும் ஒரே நேரத்தில் செல்கிறார்கள். ஒரே நேரத்தில் போன் பண்ணுகிறார்கள். மைக்ரோ செகன்ட் வித்தியாத்தில் விஜயின் போனை எடுத்துவிடுகிறார் அந்த பிக்பாக்கெட் ஆசாமி. அடுத்த முனையில் வில்லன் டயல் செய்து கொண்டே இருக்கிறான். அதைத் தெரிந்து கொண்ட விஜய் போனை கட் செய்தால் வில்லனின் போனை அட்டென்ட் பண்ணி விடுவானோ என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். நமக்கு டென்சன் ஏத்துராங்கலாமாம்.. டேய் பக்கிகளா அவன்கிட்ட,இந்த போனை கட் பண்ண உடனையே ஒருத்தன் போன் பண்ணுவான் அத எடுக்காதனு சொல்லிட்டா பிரச்சனை முடிந்தது.காதுல பூ வைக்கிறதுக்கு பதிலா புய்ப்பமே வைப்பீங்க போல..

படத்தில் ஒரே ஆறுதல் ‘ரைசிங் ஸ்டார்’ சாம் ஆண்டர்சன். மனுஷன் ஒரு நிமிஷம் வந்தாலும் தியேட்டரை அதிரவைக்கிறார். அதிலும் ராசாத்தி பாடலுக்கு ஷோல்டரை குலுக்கி ஒரு மூவ்மென்ட் போடுவார் பாருங்க… சோர்ந்து உட்காந்தவங்க எல்லாரையும் நிமிர்ந்து உட்கார வச்சிட்டாரய்யா..

இந்தப்படம் மூலம் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஏதாவது போட்டி வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். விஜய் என்கிற ஒரு மாஸ் ஹீரோவுக்கு படம் பண்ணுகிறபோது அவர் ரசிகர்களை குஷிப்படுத்த எந்த மாதிரியான காட்சியமைப்பு வைக்க வேண்டும் என்பதில் மெகா கோட்டை விட்டிருருக்கிறார் இயக்குனர்.