Friday, September 12, 2014

வானவராயன் வல்லவராயன் திரை விமர்சனம்



''கழுகு'' கிருஷ்ணா நடித்து வெளிவந்திருக்கும் பக்கா கமர்ஷியல் படம், அண்ணன், தம்பி பாச, நேச சென்டிமெண்ட்டை வலியுறுத்தும் இந்த காலத்து 'ஆண்பாவம்' - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ''வானவராயன் வல்லவராயன்'' படம் பற்றி...

வானவராயன் - கிருஷ்ணாவும், வல்லவராயன் - மா.கா.பா.ஆனந்தும் ஆ...ஊ..என்றால் அடித்துக் கொள்ளும் அண்ணன் தம்பிகள்...ஆனாலும் அவர்களை அடிக்க யாராவது வந்தால் இருவரும் எதிராளிகளை உண்டு, இல்லை...என செய்துவிடும் உயிருக்கு உயிரான உடன்பிறப்புகள். இப்படிப்பட்ட இருவருக்குமிடையே வானவராயன் கிருஷ்ணாவின் காதலியாக மோனல் கஜார் மூக்கை நுழைக்கிறார்.

காதலி அஞ்சலியான மோனலை நள்ளிரவு 12 மணிக்கு சந்திக்கப் போன கிருஷ்ணாவை, மோனலின் அண்ணன் எஸ்.பி.சரண் தலைமையில் ஊரே ஒன்று திரண்டு அடித்து, உதைத்து அனுப்ப, இதில் ஆவேசமாகும் தம்பி மா.கா.ப.ஆனந்த், பதிலுக்கு புல்மப்பில் ஆட்களை திரட்டிக் கொண்டு போய் மோனலின் அப்பா ஜெயப்பிரகாஷின் வேட்டியை உருவி அடித்து உதைத்து விட்டு வருகிறார். இதனால் பணால் ஆகும் கிருஷ்ணா-மோனலின் காதல் மீண்டும் கை கூடியதா? இல்லையா? பொறுப்பில்லாத வானவராயன் வல்லவராயன் பிரதர்ஸ் பொறுப்பானவர்கள் ஆனார்களா? இல்லையா? என்பதை காதலும், காமெடியும் கலந்து கலர்ஃபுல்லாக சொல்லியிருக்கின்றனர்.

வானவராயனாக கிருஷ்ணா, ஃபுல்லாக குடிப்பதும், பொண்ணு கிடைக்கலையே என ஏங்குவதுமாக வழக்கம் போலவே பிய்த்து பெடலெடுத்திருக்கிறார்.

வல்லவராயனாக மா.கா.ப.ஆனந்த் புதுமுகம் என்பது தெரியாத அளவிற்கு, கிருஷ்ணாவுக்கு ஈடுகொடுத்து போஷாக்காக நடித்திருக்கிறார்.

கதாநாயகி மோனல் கஜார், அஞ்சலி கதாபாத்திரத்தில், கிளாமருக்கும் ஒத்துவரும் ஹோம்லி குத்துவிளக்காக மிளிர்ந்திருக்கிறார்.

அமெரிக்க மாப்பிள்ளையாக சந்தானம் கெஸ்ட் ரோலில் வந்தாலும் பெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். க்ளைமாக்ஸில் கல்யாண மண்டபத்திலும், மருத்துவமனையிலும் அவர் பண்ணும் அலப்பறையில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.

ராயர் பிரதர்ஸின் அப்பாவாக தம்பி ராமையா, பாட்டி செளகார் ஜானகி, அம்மா கோவை சரளா, மோனலின் அப்பா ஜெயபிரகாஷ், அம்மா மீரா கிருஷ்ணன், அண்ணன் எஸ்.பி.சரண், குடிகார சித்தாப்பாவாக வரும் 'மேனேஜர்' கிருஷ்ணமூர்த்தி, பிரியா, பாவா லட்சுமணன் உள்ளிட்ட எல்லோரும் பளிச் தேர்வு, பலே நடிப்பு. அதிலும் தம்பி ராமையா காமெடியாகவும், கண்ணீர் வரவழைக்கும் படியும் ரசிகர்களை உருக்கி எடுத்து விடுகிறார்.

ஆறு பாடல்களிலும் பாடலாசிரியர் சினேகனின் சிலேடை வரிகள், யுவன்சங்கர் ராஜாவின் இனிய இசை, பழனிகுமாரின் பளிச் ஒளிப்பதிவு, ராஜமோகனின் எழுத்து,இயக்கம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், ஆர்.பாண்டியராஜனின் பழைய 'ஆண்பாவம்' வாடை ஆங்காங்கே அடித்தாலும், ரொம்ப நாளைக்கு அப்புறம் கொங்கு தமிழில், பொள்ளாச்சி பேக்-ரவுண்டில் ''வானவராயன் வல்லவராயன் - வசூல் ராயன்!!''