Sunday, April 28, 2013

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கருணாநிதி வலியுறுத்தல்



இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அனுராதபுரம் சிறையில் இருக்கும் 30 தமிழக மீனவர்களின் காவலை மன்னார் நீதிமன்றம் மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், புதுச்சேரி, காரைக்காலைச்சேர்ந்த 26 மீனவர்களை மே 29ஆம் தேதி வரை காவலில் வைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கருணாநிதி,இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இத்தலி கடற்படையினரால் கேரள மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் காட்டும் அக்கறையில் நூறில் ஒரு பங்கையாவது தமிழக மீனவர்கள் விசயத்தில் மத்திய அரசு காட்ட வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.