Friday, February 22, 2013

இந்தியாவில் பேஸ்புக் மக்கள் 7.1 கோடி


உலகின் மிகப் பெரிய சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக், சென்ற டிசம்பர் வரையில், இந்தியாவில் 7 கோடியே 10 லட்சம் பதிவாளர்களைக் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை அடுத்து, இந்தியாவில் தான் அதிகம் பேர் பேஸ்புக் இணைய தளத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். மொத்தத்தில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 கோடியாக இருப்பதாகக் கணக்கிட்டாலும், இந்திய இணையப் பயனாளர்களில் பாதிப்பேருக்கும் மேலானவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதில் பேஸ்புக் பெருமை கொள்ளலாம்.

உலக அளவில் பேஸ்புக் நேயர்களைக் கணக்கிட்டால் இது வெறும் 7% தான். அண்மையில் பேஸ்புக் தளப் பதிவாளர் எண்ணிக்கை பன்னாட்டளவில் நூறு கோடியைத் தாண்டியது என்ற தகவல் வெளியானது. பேஸ்புக் தளத்தினைப் பொறுத்தவரை, இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் தான் வாடிக்கையாளர் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது. மொத்த வாடிக்கையாளர்களில், 84% பேர் அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளில் உள்ளனர். பிரேசில் 2011ல், பேஸ்புக் தள நேயர்களின் எண்ணிக்கையை 81% உயர்த் தியது. மொத்த பயனாளர்கள் 6.70 கோடி பேர். இந்தோனேஷியா 25% வளர்ச்சி மேற்கொண்டு, 2012ல் 6 கோடி பேரைக் கொண்டிருந்தது.

தினந்தோறும் பேஸ்புக் தளத்தினைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், 2012ல் 28% ஆக உயர்ந்தது. இவர்களில் அதிகம் பேர், பிரேசில், இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களாவர். 2012 செப்டம்பரில் தினந் தோறும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 58 கோடியே 40 லட்சம் ஆகும்.
ஆனால், அனைத்து நாடுகளிலும், மொபைல் சாதனங்கள் வழியாக பேஸ்புக் தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.சென்ற டிசம்பர் முடிவில், இவர்களின் எண்ணிக்கை 15.7 கோடியாகும். மற்ற 52.3 கோடி பேர் மொபைல் சாதனங்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் களில் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத் தினார்கள். இருப்பினும் வருங்காலங்களில், மொபைல் வழி பேஸ்புக் பயன்படுத்து பவர்களே அதிகமாக இருப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

2004ல் தொடங்கப்பட்டு, பிப்ரவரி 4 முதல் தன் ஒன்பதாவது ஆண்டு இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது பேஸ்புக். ஆர்குட், யாஹூ 360 போன்றவற்றின் வாடிக்கையாளர்கள் படிப்படியாய் குறைந்துவிட, பேஸ்புக் வேகமாக வளர்ந்து, தானே முதல் இட சமூக இணைய தளம் என்ற பெயரினைப் பெற்றுள்ளது.

நன்றி : தினமலர்