Sunday, September 22, 2013

6 திரை விமர்சனம்

‘12பி’ படத்திற்குப்பின் எத்தனையோ படங்களில் நடித்திருந்தும் எதிர்பார்த்த இடத்தை இன்னமும் பிடிக்காமல் இருக்கும் கதாநாயகர் ஷாமுக்கு முன்னணி இளம் ஹீரோக்கள் வரிசையில் இடம்பிடிக்க ஏதுவாக வெளிவந்திருக்கும் படம். ‘முகவரி’ படத்திற்குப்பின் எத்தனையோ படங்களை இயக்கி இருந்தும் தனக்கென சரியான ஓர் இடத்‌தை பிடித்து வைத்துக்கொள்ளாத இயக்குநர் வி.இசட்.துரைக்கு சரியான ஒரு இடத்தை பெற்றுத்தர வெளிவந்துள்ள திரைப்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை, எதிர்பார்க்கப்பட்டதற்கும் மேலாக பூர்த்தி செய்யும்படியாக பிரமாண்டமாகவும், பிரமாதமாகவும் வந்திருக்கிறது ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் என்றால் மிகையல்ல!



இந்திய அளவில் ‘நெட்வொர்க்’ அமைத்து குழந்தை கடத்தும் கும்பலை பற்றிய கதைதான் ‘6 மெழுகுவர்த்திகள்’ மொத்த படமும்! குழந்தைகள் எதற்காகவெல்லாம் கடத்தப்படுகின்றன... எங்கெல்லாம் விற்கப்படுகின்றன... எப்படியெல்லாம் சித்ரவதை செய்யப்படுகின்றன என்னும் விஷயங்களை இதுவரை இந்திய மொழிப்படங்களில் இவ்வளவு விலாவாரியாக யாரும் சொல்லியிருப்பார்களா? தெரியவில்லை! அந்த ஒரு விஷயத்திற்காகவே இயக்குநர் வி.இசட்.துரைக்கு இந்திய அளவில் சிறந்த இயக்குநர் என்னும் தேசிய விருதினை கொடுக்கலாம்!

‘6 மெழுகுவர்த்திகள்’ கதைப்படி, தங்கள் ஒற்றை ஆண் குழந்தையின் 6வது பிறந்த தினத்தின்போது கேக் எல்லாம் வெட்டிமுடித்தும் முடிக்காமலும் ஹாயாக ‌குழந்‌தையுடன் மெரீனா பீச்சுக்கு போகிறது ஷாம்-பூனம் கவுரின் அழகிய சிறு குடும்பம்! அங்கு சின்னதாக ஒரு கவன பிசகலில் இருவரும் குழந்தையை தொலைத்துவிட்டு தேட, எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை! இவர்களின் கதறலை பார்த்துவிட்டு ஓடிவரும் சுற்றமும் நட்பும் கூறும் ஆலோசனையின்படி போலீசுக்கு போகின்றனர். முதலில் போக்கு காட்டும் போலீசும் பிறகு சமூக விரோதிகளை சட்டத்திற்கு தெரியாமல் அடையாளம் காட்டி அவர்கள் கேட்பதை கொடுத்து குழந்தையை மீட்டுக்கொள்ளும்படி ‘எஸ்’ ஆகிறது! அப்புறம்? அப்புறமென்ன? குழந்‌தையைத் தேடி ஷாம், ஆந்திரா நகரி, வாரங்கல், போபால், மும்பை, கோவா, கொல்கத்தா என அவர்கள் கைகாட்டும் இடங்களுக்கு எல்லாம் போய் பல இடங்களில் எந்த எதிர்ப்பும் காட்டாமலும் சில இடங்களில் ஆக்ஷனிலும் இறங்கி, 50 லட்சம் காசையும் கொடுத்து, குழந்தையை மீட்டாரா, இல்‌லை மீட்டெடுக்க முடியாது மாண்டாரா?! என்பது திக்திக்திக் க்ளைமாக்ஸ்!

ஷாம், ராம் என்னும் அப்பா கேரக்டரில் நடிக்கவில்‌லை. வாழ்ந்திருக்கிறார். அவரும் பூனம் கவுரும் குழந்தையை தொலைத்துவிட்டு தேடும் காட்சிகளில் ஏதோ படம் பார்க்கும் நாம், நமது குழந்தை செல்வத்தை தொலைத்துவிட்டு தேடுவது போன்றதொரு பிரமை, பயம், திகில் நம்முள் புகுந்துகொண்டு நம்மையும் ராம் என்னும்‌ ஷாமாகவே மாற்றி குழந்தையை தேடவைக்கும் கதை ஓட்டமும் காட்சி பதிவுகளும் 6 மெழுகுவர்த்திகள் திரைப்படத்தின் பெரிய ப்ளஸ்! ஷாம் தைரியமாக இருங்கள். இந்தப் படத்துக்காக உங்களுக்கு விருதுகளும் விழாக்களும் ஏராளம் காத்திருக்கிறது!

நாயகி பூனம் கவுர் லிஸியாக வாழ முற்பட்டிருக்கிறார். மற்றபடி ஷாம்-பூனம் ஜோடியின் நண்பர் குடும்பம் தவிர யாரென்றே தெரியாமல் போலீசுக்கு போகச்சொல்லி உதவ வரும் நபரில் தொடங்கி, போலீஸ் இன்ஸ், கான்ஸ்டபிள், கார் டிரைவர், போபால் மலையாளி வில்லன்‌, கொத்தா பொட்டுவைத்த தாதா வரை எல்லோரும் மறைமுகமாகவோ நேர்முகமாகவோ குழந்தை கடத்தலில் சம்பந்தப்பட்ட கொடூரமானவர்கள். க்ளைமாக்ஸில் ஹீரோவுக்கு உதவும் அந்த ‘பாயை’ தவிர மற்ற அனைவரும் மிக மோசமானவர்கள். ஒவ்வொரு படத்திலும் தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்களை காட்டும் நம் சினிமாக்காரர்களுக்கு சவுக்கடி தரும் விதமாக அந்த இஸ்லாமிய பெரியவரை நல்லவராக காட்டி குழந்தை கடத்துபவர்களும் தீவிரவாதிகள்தான்... என தங்கள் மதத்தினருக்கு ஆறுதலை தர முயன்றிருக்கிறார்கள் இயக்குநர் வி.இசட்.துரை, நாயகர் ஷாம், தயாரிப்பாளர் மீடியா இன்ஃபினிட்டிவ் நிஜாம் உள்ளிட்டவர்கள்! இவர்களின் முயற்சிக்கு ஸ்ரீகாந்த் தேவாவின் மிரட்டல் இசையும், கிருஷ்ணசாமியின் பிரமாண்ட ஒளிப்பதிவும் பக்க(கா)பலமாக இருந்து 6 மெழுகுவர்த்திகளை ஒளிரவைத்திருக்கின்றன.!

ஆக மொத்தத்தில் ‘6 மெழுகுவர்த்திகள்’ உருகவில்‌லையே! நம்மை உருக்கிவிடுகின்றது!