Saturday, September 28, 2013

தூத்துக்குடி ஒரு வரலாற்று பயணம்



தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.கி.மு.123ல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி)சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.

அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்' என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்க்கோ போலோ எனும் இத்தாலியப் பயணி முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துரையை பற்றி சென்னை அரசாங்கத்திற்கு தான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாக மாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று டூட்டிகொரின் ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி கடந்த காலத்தில் 'திரு மந்திர் நகர்' என்று அறியப்பட்டது. அனுமான் சீதையை தேடி இலங்கை செல்லும் வழியில் தூத்துக்குடி நகரில் முகாமிட்டிருந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த நகரத்தின் பெயரும் கூட “தூதன்” என்ற வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.மேலும் இந்நகரத்தின் பெயர் பின் வரும் இரண்டு வார்த்தைகளில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

அதாவது “தூர்த்து” இதன் பொருள் ‘கடலில் இருந்து உருமாறி வந்த நிலம்’.“குடி” இதன் பொருள் ‘ குடியமர்தல்’. வரலாற்றின் ஆரம்ப நாட்களில் இருந்து துறைமுக நகராக இருப்பதினால் இது பிரபலமாக உள்ளது. பாண்டிய மன்னன் ஆட்சி காலத்தில் கூட இது ஒரு பிரபலமான துறைமுகமாக இருந்து வந்துள்ளது.1548 ம் ஆண்டு ,இந்நகரத்தை பாண்டிய மன்னனிடம் இருந்து போர்த்துகீசியர் எடுத்து கொண்டனர். 

பின்னர் 1658 இல் இந்நகரம் டச்சுகாரர்கள் வசம் சென்றது. பின்னர் 1825 இல் இது ஆங்கிலேயர் கீழ் வந்தது.1866 ல் இது ஒரு நகராட்சியாக நிறுவப்பட்டது மற்றும் ரோச் விக்டோரியா இந்நகரத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2008 ல் இது ஒரு மாநகராட்சியாக மாற்றப்பட்டது