Friday, January 10, 2014

ஜில்லா திரைவிமர்சனம்



மதுரையில் மிகப்பெரிய தாதாவான மோகன்லாலிடம் அடியாளாக இருக்கிறார் விஜய்-யின் அப்பா. ஒருநாள் மோகன்லாலின் மனைவியை பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸ்காரர்களால் விஜய்-யின் அப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார். அன்றிலிருந்து விஜய்-க்கு போலீஸ் என்றாலே பிடிக்காமல் போய்விடுகிறது.

தனது அப்பாவை இழந்த விஜய், மோகன்லால் வீட்டில் அவரது மகனாகவே வளர்கிறார். வளர்ந்து பெரியவனானதும் மோகன்லால் கட்டளையிடும் வேலைகளை செய்து முடிப்பவராக விளங்குகிறார் விஜய். மோகன்லாலுக்கு மஹத், நிவேதா தாமஸ் என இரண்டு பிள்ளைகள்.

மதுரை வீதியில் ஒருநாள் காஜல் அகர்வாலை பார்க்கும் விஜய் அவள்மீது காதல் கொள்கிறார். மஹத், நிவேதா தாமஸிடம் சென்று காஜலின் அழகை வர்ணிக்கிறார். இதனால் அவர்களுக்கு காஜலைப் பார்க்கும் ஆசை துளிர்விடவே, காஜலின் வீட்டுக்கு விஜய்யை கூட்டிக் கொண்டு செல்கிறார்கள். அங்கு, அவளை போலீஸ் உடையில் பார்த்ததும், அவள் மீது வெறுப்பு கொள்கிறார் விஜய்.

மறுமுனையில் மதுரைக்கு போலீஸ் கமிஷனராக வரும் பிரதீப் ராவத், விஜய் வீட்டில் இல்லாத சமயத்தில் வந்து மோகன்லாலை கைது செய்து அழைத்துப் போகிறார். அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகாமல் போலீஸ் வண்டியிலேயே 5 மணி நேரம் மதுரையை வலம் வருகிறார். அப்போது மோகன்லாலிடம் ரவுடித்தனத்தை விட்டுவிடுமாறு வித்யூத் ஜம்வால் கூறுகிறார். ஆனால், மோகன்லால் ரவுடிசத்தை விடமுடியாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். இறுதியில், மோகன்லாலை எச்சரித்துவிட்டு நடுரோட்டில் இறக்கிவிட்டு போய்விடுகிறார்.

இதை அறியும் விஜய், தன் அப்பாவை கைது செய்த வித்யூத் ஜம்வாலின் ஒரு கையை வெட்டி எடுத்து விடுகிறார். இருந்தும், தான் கைதான அவமானம் தாங்கமுடியாத மோகன்லால் தன்னுடைய ஆள் ஒருவர் போலீஸ் பணியில் இருந்தால் இதுபோன்று நடக்காது என முடிவெடுத்து, விஜய்யை போலீஸ் பணியில் அமர்த்த முடிவெடுக்கிறார். ஆனால், போலீஸ் என்ற வார்த்தையே பிடிக்காத விஜய் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

மோகன்லாலின் விருப்பத்திற்காக வேண்டா வெறுப்பாக போலீஸ் செலக்ஷனில் கலந்து கொள்கிறார். இருந்தாலும் மோகன்லால், மந்திரியான சம்பத்தின் உதவியால் விஜய்யை கமிஷனராக ஆக்குகிறார். கமிஷனராகும் விஜய், போலீஸ் உடை உடுத்தாமல், சாதாரண உடையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வருவதாக இருக்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் மஹத் தனது அடியாட்களுடன் சென்று ஒரு இடத்தை வாங்குவதற்காக அடி-தடி நடத்தி அந்த இடத்தை துவம்சம் செய்துவிட்டு வருகிறார். இந்த கலவரத்தில் அந்த இடத்தில் இருக்கும் சிலிண்டர்களில் உள்ள வாயு கசிந்து சிலிண்டர்கள் எல்லாம் வெடித்து சிதறுகிறது. அந்த இடத்துக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடம், பேருந்து, சாலையில் செல்பவர்கள் என்று அனைவரும் இந்த தீயிற்கு இரையாகின்றனர். அதில், பல குழந்தைகளும் பலியாகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் விஜய் இதற்கு மோகன்லால்தான் காரணம் என்று அவர்மீது கோபப்படுகிறார்.

எனவே, அதுவரை போலீஸ் உடையை போடாத விஜய், அந்த உடையை அணிந்துகொண்டு மோகன்லாலிடம் சென்று இனிமேல் இதுபோன்ற காரியங்களில் இறங்கவேண்டாம் என்று சொல்கிறார். தன்னால் வளர்ந்தவன் இன்று இப்படி தன்னை மிரட்டுகிறானே என்று விஜய் மீது கோபம் கொள்கிறார் மோகன்லால். இறுதியில், உன்னால் முடிந்ததை நீ செய்துகொள். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று சவால் விட்டு இருவரும் பிரிகிறார்கள்.

இறுதியில், தன் அப்பாவை மாற்றினாரா? அல்லது போலீஸ் வேலையை விட்டுவிட்டு தன் அப்பாவுடன் சேர்ந்தாரா? என்ற மீதிக்கதையை விறுவிறுப்புடன் கூறியிருக்கிறார்கள்.

விஜய் காமெடி, டான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் வெளுத்து வாங்குகிறார். போலீஸ் கெட்டப்பில் இவரை ஏற்கெனவே ரசித்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து படைத்திருக்கிறார். இவருக்கு போட்டியாக மோகன்லாலும் நடிப்பில் களைகட்டுகிறார். இருவரும் சவால் விடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும். மோகன்லால் வில்லனாக மிரட்டுவதிலும், பாசம் காட்டுவதிலும் தனது அனுபவப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

காஜல் அகர்வால் போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார். பாடல் காட்சிகளிலும், போலீஸ் உடையிலும் அழகோ அழகு. சூரி, வித்யூத் ஜம்வால் ஆகியோர் ஒருசில காட்சிகளில் வந்துபோனாலும் மனதில் நிற்கிறார்கள். சம்பத் கதைக்கு ஒரு திருப்புமுனையாக வருகிறார். மந்திரி கெட்டப்பில் வில்லத்தனம் காட்டும் இவருடைய நடிப்பு அபாரம். பூர்ணிமா பாக்யராஜ் அம்மா கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். விஜய் தம்பி, தங்கையாக வரும் மஹத், நிவேதா தாமஸ் இருவரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

புதுமுக இயக்குனரான நேசன் காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த மசாலாவாக படத்தை கொடுத்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை. டி.இமான் இசையில் விஜய்-மோகன்லால் அறிமுகமாகும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. அந்த பாடல் படமாக்கிய விதம் பிரம்மாண்டத்தை காட்டுகிறது. கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு ஆக்சன் காட்சிகளில் காட்சியோடு ஒன்ற வைக்கிறது. பாடல்கள் படமாக்கிய விதம் அருமை.

மொத்தத்தில் ‘ஜில்லா’ களைகட்டுகிறது.

Thanks : maalaimalar