Saturday, March 8, 2014

நிமிர்ந்து நில் திரை விமர்சனம்


இந்த உலகில் பிறக்கும் அனைத்து உயிரினங்களில் மனித உயிரினம் மட்டும் தான் லஞ்சம் என்கிற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சமுதாயம் இப்படி மாற இப்படி சீரழிய இந்த லஞ்சம் ஏய்ட்ஸை விட கொடூரமாக மனிதர்களை தாக்கியிருக்கிறது. இதில் பணம் இருப்பவன் வாழ்கிறான் பணம் இல்லாதவன் போராடி வீழ்கிறான். சமுத்திரகனியின் இந்த நிமிர்ந்து நில் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை கொண்டு சேர்க்கட்டும்....

சிலையும் நீயோ சிற்பியும் நீயே முதலில் நீ உன்னை சரி செய்துக்கொள் உலகம் தானாக திருந்திவிடும் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து இவ்வளவு அற்புதமான படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரகனி. தனது சிறு வயதிலிருந்தே அறவழிக்கல்வியை பயின்று ஒழுக்கத்தையும், நேர்மையை கற்றுக் கொண்ட ஜெயம் ரவி. வெளியுலகம் எவ்வளவு கொடூரமாக இருக்கிறது என்று நேரில் பார்க்கும்போது அவருக்கு கண்களில் கண்ணீர் வருகிறது. ரோட்டில் எவனோ ஒருவன் சண்டைபோட அதை ஏன் என்று தட்டிக்கேட்காமல் ஓரமாய் நின்று வேடிக்கைப்பார்க்கும் மனிதர்கள் மத்தியில் துணிந்து சென்று கேள்வி கேட்கிறார் ஜெயம் ரவி. விளைவு அவரின் சட்டைப் பை கிழிந்தது தான் மிச்சம். இப்படி நமக்கென்ன என்று ஒதுங்கும் மக்களிடையே வாழ முடியாமல் துடியாய் துடிக்கிறார் ஜெயம் ரவி.

சிக்னல் சரியாக வேலை செய்யாமல் திடீர் போக்குவரத்து ஏற்பட அங்கே எற்படுகிறது ரவியின் வாழ்க்கையில் திருப்பம். இவரை பிரச்சனையில் தள்ளி விட்டு தனது கருத்தை ஆழ பதித்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரகனி. சிக்னலில் தொடங்கி கோர்ட் வரைக்கும் ரவிக்கு ஏற்படும் அநியாயங்களை பார்க்கும்போது நம்மை அறியாமலே நமக்குள் ஒரு கோபம் வந்துவிடுகிறது. சுதந்திரம் வாங்கி இத்தனை வருடங்கள் ஆகியும் 50 சதவீதத்திற்கும் மேல் இளைஞர்கள் இருக்கும் இந்திய நாட்டில் இன்னும் வருமை ஒழிந்தபாடில்லை. 

இதற்கு காரணம் லஞ்சம் என்று உணரும் ஜெயம் ரவி. இதற்கு காரணமான அரசாங்க ஊழியர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க எடுக்கும் முயற்சிகள், நிச்சயம் யாரும் நினைத்து பார்க்காத ஒரு திருப்பம். படத்தில் ஜெயம் ரவிக்கு இரண்டு வேடம் அந்த இரண்டாவது வேடத்தில் அவர் காட்டியிருக்கும் வித்தியாசம் ரசிக்க வைக்கிறது.இயக்குநர் சசிகுமார் ஒரு முக்கியமான இடத்தில் குரல் கொடுத்திருக்கிறார். 

ரவி பேசும் வசனங்கள் அனைத்தும் நடு மண்டையில் ஆண்யை வைத்து அடித்தது போல இருக்கிறது. குறிப்பாக ஒரு வசனம் உங்களுக்காக “அங்க நம்ம அண்ணன் தம்பியை சுட்டுக் தள்ளினாங்க ,நம்ம அக்கா, தங்கச்சிய கற்பழிச்சாங்க நாம என்ன செய்தோம் இங்க உட்கார்ந்துட்டு ஐ.பி.எல் பார்த்துட்டு இருந்தோம்” என்று சொல்லும்போது மனம் கொந்தளிக்கிறது.

ஜெயம் ரவியின் நேர்மையே அமலா பாலுக்கு இவர் மேல் காதல் வர காரணமாகிறது. ஆனால் இந்த காதலை அலசி ஆராய நேரமில்லாததால் அதை சும்மா லைட்டா காட்டியிருக்கிறார்கள். முன்பிருந்த அழகைவிட அமலா பால் இந்த படத்தில் மிக அழகாக தெரிகிறார்.

சூரி கதையுடன் செல்லக்கூடிய காமெடியை மட்டும் செய்திருப்பதால் பாராட்டு பெறுகிறார். இதற்கு முன் படத்தில் இவருக்கு பட்டம் இருந்ததா என்று தெரியவில்லை ஆனால் இந்த படத்தின் டைட்டில் கார்ட் போடும் போது சூரி என்ற பெயருக்கு மேல் ஒரு பட்டப்பெயரும் வந்தது. பரவாயில்ல புயல், சூறாவளி என பெயர் வைக்கும் இந்த காலத்துலயும் தனக்கு “கருப்பு தங்கம்” என்று பெயர் வைத்திருக்கிறார். இது கண்டிப்பா அவரு வச்சிருக்க மாட்டாரு அவரது ரசிகர்கள் தான் வச்சிருப்பாங்க. அட நம்புங்கப்பா....!. ராஹினி திவேதி இவர் கன்னடத்தில் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் இவருக்கு இது இரண்டாவது படம் இதற்கு முன் அறியான் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார்.

கோபிநாத் படத்திற்கு பெரிய ப்ளஸ்ஸாக வருகிறார். விஜய் டிவியின் நீயா நானாவில் என்ன செய்தாரோ அதை அப்படியே பெரிய திரையிலும் செய்திருக்கிறார். என்ன மனதுக்குள் கொட்டிக்கிடந்த வசனங்களை அப்படியே சமுத்திரக்கனி அவரிடம் கொடுத்ததுபோல அப்படி ஒரு யதார்த்தம் நல்லாயிருக்கு அண்ணே. சரத்குமார் கொஞ்ச நேரமே திரையில் தோன்றினாலும் இவர் வரும் காட்சிகளில் அனல் பறக்கிறது அப்படி ஒரு சூடு, ஆட்டோ மீட்டர் கூட வேஸ்ட் தான்...

ஒளிப்பதிவு சுகுமார்-ஜீவன் கலக்கியிருக்கிறார்கள். இசை ஜி.வி.பிரகாஷ் குமார் இரண்டே பாடல்கள் தான் மனதில் நிற்கின்றன. பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக வருகிறது. இதற்கு முன் எத்தனையோ அறிவுரைகளை சொன்ன சமுத்திரகனி, இதற்கு முன் அரசியல்வாதிகளுடன், ரவுடிகளுடனும் மோதிக் கொண்டிருந்த சமுத்திரகனி இம்முறை கையில் எடுத்திருக்கும் ஆயுதம் பழையதாக இருந்தாலும் சொல்லியிருக்கும் விதமும் அந்த தவறுக்கான தண்டனையையும் சொல்லியிருக்கிறார். கண்டிப்பாக இந்நாட்டில் குற்றங்கள் குறைய வேண்டுமானால் தண்டனைகள் கடுமையாக வேண்டும் இதுதான் சரியான தீர்ப்பு. மற்றபடி படத்தின் வேகம் எப்போதும் சமுத்திரகனி பார்ப்பதுபோல படுவேகமாக நகர்கிறது. விமர்சனம் முடிக்க மனம் இல்லை இருந்தாலும் நானும் ஒரு சராசரி மனிதன் என்பதால் என் மனதிலும் நான் செய்த குற்றம் என்னை தொற்றிக் கொண்டது.

நிமிர்ந்து நில் - இனி நீ துணிந்து நில்...!

Source : kalasal.com