Thursday, August 21, 2014

ரூ 50 லட்சம் செக் மோசடி இயக்குநர் சரண் கைது


சென்னை: ரூ 50 லட்சம் செக் மோசடி வழக்கில் பிரபல இயக்குநர் சரண் இன்று கைது செய்யப்பட்டார். 

காதல் மன்னன் படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் சரண். தொடர்ந்து அமர்க்களம், அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், வட்டாரம் உள்பட பல்வேறு படங்களை இயக்கினார். 

தற்போது இவர் ‘ஆயிரத்தில் இருவன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் நடந்து வருகிறது. இன்று காலை நெல்லை ரெட்டியார்பட்டி பைபாஸ் சாலையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. 

படத்தின் காட்சிகள் குறித்து நடிகர், நடிகைகளுக்கு விளக்கி கொண்டிருந்தார் சரண். அப்போது அங்கு சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் வந்தனர். உடனே படப்பிடிப்பை நிறுத்திய சரண், போலீசாரிடம் விளக்கம் கேட்டார். ரூ.50 லட்சம் செக் மோசடி வழக்கில் சிவகாசி கோர்ட்டு பிடி ஆணை பிறப்பித்துள்ளதையும், இந்த வழக்கில் ஆஜர்படுத்த கைது செய்வதாகவும் போலீசார் அவரிடம் தெரிவித்தனர். 

இதையடுத்து போலீசார் சரணை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சிவகாசி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.