கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடன் வாங்கி தருவதாக கூறி சென்னை மட்டுமின்றி பக்கத்து மாநில தொழில் அதிபர்களிடமும் கோடிக் கணக்கான ரூபாயை இவர் சுருட்டியிருப்பது அம்பலமானது.
ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.20 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் வாங்கி மோசடி செய்த வழக்கில் சீனிவாசன் கைது செய்யப்பட்ட பின்னர் ஏராளமான புகார்கள் அவர் மீது குவிந்தன. கடந்த 1 1/2 மாதங்களாக சீனிவாசன் வேலூர் சிறையில் இருந்து வருகிறார்.
சென்னையில் மட்டும் அவர் மீது 6 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், டெல்லியிலும் பவர் ஸ்டார் சீனிவாசன் கைவரிசை காட்டியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லியில் கட்டமைப்பு நிறுவனம் நடத்தி வரும் திலீப் என்ற தொழில் அதிபர், பவர் ஸ்டார் சீனிவாசனை அணுகி தனக்கு 1000 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு கமிஷனாக சீனிவாசன் ரூ.5 கோடி பெற்றதாக தெரிகிறது. இதன் பிறகு வழக்கம் போல சீனிவாசன், திலீப்புக்கு கடன் வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்.
இது தொடர்பாக திலீப் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார் கடந்த 2-ந் தேதி வேலூர் வந்தனர். பின்னர் புழல் சிறைக்கு சென்று தங்களது மாநிலத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை காட்டி முறைப்படி அவரை கைது செய்தனர். பின்னர் சீனிவாசன் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.