Saturday, May 31, 2014

கண்ணை கட்டிக்கொண்டு ' செஸ்' விளையாடி10 ம் வகுப்பு மாணவர் உலக சாதனை: 29 நிமிடத்தில் 10 பேரை தோற்கடித்தார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கண்ணை கறுப்பு துணியால் கட்டிக்கொண்டு, 'செஸ்' விளையாடிய பத்தாம் வகுப்பு மாணவர் மகாராஜன், 29 நிமிடத்தில் 10 பேரை தோற்கடித்து, உலக சாதனை படைத்தார்.

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் மகாராஜன். இவர் கண்ணை கட்டிக்கொண்டு 'செஸ்' விளையாடுவதில் உலக சாதனை படைத்துள்ளார். இவரது இரு கண்களிலும் பஞ்சுகள் வைத்து, கறுப்பு துணியால் கட்டப்படுகிறது. பின், எதிரில் விளையாடும் நபர் நகர்த்தும் காய்களுக்கு 'ஏ' முதல் 'எச்' வரையிலான ஆங்கில எழுத்துக்கள் மூலம் 8 எண்களில் 'கோடு வேர்டு' தரப்படுகிறது.

இதில் எந்த காயை, எந்த பக்கம் நகர்த்தியுள்ளனர் என்பது மட்டும் மகாராஜனுக்கு தெரிவிக்கப்படும். அதை புரிந்துகொண்டு, எதிராளிகளுடன் 'செஸ்' விளையாடிய மகாராஜன், 29 நிமிடத்தில் 10 பேரை தோற்கடித்துள்ளார்.புதுச்சேரியை தலைமை இடமாக கொண்டு, உலக சாதனைகளை பதிவு செய்து வரும், 'அசிஸ்ட் புக்ஸ் ஆப் ரிக்கார்டு' என்ற அமைப்பு ஏற்பாடு செய்த போட்டியில் தான் மகாராஜன், புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அவர் கூறுகையில்,''செஸ் விளையாட்டில் எனக்கு இருந்த ஆர்வத்தால், உலக சாதனை படைக்க முடிந்தது. செஸ் விளையாட்டில் அனைத்து காய்களுக்கும் ஆங்கிலத்தில் உள்ள முதல் 8 எழுத்துக்களுக்கும், 8 நம்பர்கள் அதாவது ஏ1, ஏ2 , என்பது போன்று வழங்கப்பட்டிருக்கும். இவை இடது, வலது பக்கங்களில் நகர்த்தப்பட்டுள்ளது, என்பதை தெரிவிப்பார்கள். அதனடிப்படையில் எனது காய்களை நகர்த்தி வெற்றி பெறுவேன், என்றார்.

அவரது தந்தை குமார் கூறியதாவது: நான் தனியார் தீப்பெட்டி நிறுவனத்தில் 'பேக்கிங்' செய்யும் தொழிலாளி. எனது மகன் 'செஸ்' விளையாட்டில் மாவட்ட அளவில், பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளான். இதை வித்தியாசமாக ஏதாவது செய்ய வைத்து, உலக சாதனை படைக்க வேண்டும், என்று எண்ணி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முருகன் ராஜபாண்டியிடம் தெரிவித்தேன். அவர் யோகா மாஸ்டர் சுரேஷ்குமாரிடம் பயிற்சிக்கு அனுப்பினார். அவரிடம் பெற்ற பயிற்சியால், சாதனை படைத்துள்ளார், என்றார்.

யோகா ஆசிரியர் சுரேஷ்குமார் கூறியதாவது: யோகா அடிப்படையில், மனதை ஒருங்கிணைத்து முழு கவனமும் சிதையாமல் இருக்கும்படி செய்து, கண்ணை கட்டிக் கொண்டு, 'செஸ்' விளையாட பயிற்சி அளித்தேன். அதனால், மகாராஜன் சிறப்பாக விளையாடி சாதனை படைத்துள்ளார், என்றார்.